சிங்கப்பூர், ஏப்ரல் 25: சாங்கி விமான நிலையம் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 17.2 மில்லியன் பயணிகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 4.3 விழுக்காடு அதிகமாகும். மேலும், கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான எண்ணிக்கையை விடவும் இந்த ஆண்டு 4.8 விழுக்காடு அதிக பயணிகள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (ஏப்ரல் 24) ரிட்ஸ்-கார்ல்டன் மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.16 மில்லியன், பிப்ரவரி மாதம் 5.44 மில்லியன், மற்றும் மார்ச் மாதம் சுமார் 5.6 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாக சென்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சீனா சாங்கி விமான நிலையத்தின் மிகப்பெரிய சந்தையாக விளங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக பயணிகளை சாங்கிக்கு அனுப்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாதங்களில், சாங்கி விமான நிலையத்தின் மொத்த பயணிகள் போக்குவரத்து 68.4 மில்லியனை எட்டி, தொற்றுநோய்க்கு முந்தைய அளவை முதல் முறையாக விஞ்சியுள்ளது என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் ஏர் ஹப் மற்றும் சரக்கு மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் திரு லிம் சிங் கியாட் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இது விமானப் பயணத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான வளர்ச்சியை காட்டுவதாகவும், அனைத்து பிராந்தியங்களிலும் முக்கிய சந்தைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க சாங்கி விமான நிலையக் குழுமம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 10% அதிகரித்துள்ளது. அதேபோல், ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்து 16% உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் சாங்கி விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது வட அமெரிக்கா ஆகும். 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இப்பிராந்தியத்திற்கான போக்குவரத்து 15.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. இது 2019 ஆம் ஆண்டில் கையாளப்பட்ட 68.3 மில்லியன் பயணிகளில் 99.1 விழுக்காடு ஆகும்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சீனாவின் ஹார்பின், இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ மற்றும் மலேசியாவின் சுபாங் விமான நிலையம் ஆகிய புதிய நகரங்களுடன் சாங்கி விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 100 விமான நிறுவனங்கள் சாங்கி விமான நிலையத்தில் வாரந்தோறும் 7,200 க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் சிங்கப்பூர் உலகெங்கிலும் உள்ள 49 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் சுமார் 170 நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளால்…… 7 இடங்களில் வேலைநிறுத்தம்! MOM தகவல்