சிங்கப்பூரை போலவே அண்டை நாடான இந்தியாவிலும் நீதிமன்றங்கள் விசித்திரமான பல வழக்குகளை கண்டுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த வகையில் மதிய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஆணுறுப்பு இருக்கிறது என்றும், தன்னை அந்த பெண்ணும் அவரது குடும்பமும் ஏமாற்றிவிட்டனர் என்றும் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
நடந்தது என்ன?
தற்போது வழக்குபோட்டுள்ள அந்த வாலிபரின் கூற்றுப்படி, இந்த ஜோடி கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டது, திருமணத்திற்கு பிறகு சில விஷயங்களுக்கு அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க இறுதியில் அந்த இருவருக்கும் இடையே தாம்பத்திய வாழ்க்கை தொடங்கியுள்ளது. அப்போது தான் அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்துள்ளார், அந்த பெண்ணுக்கு அவரது பெண்ணுறுப்பில் சில ஆண் பண்புகள் இருந்ததை கண்டறிந்துள்ளார்.
உடனடியாக தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல, அங்கு அவருக்கு Congenital Adrenal hyperplasia என்ற மரபணு கோளாறு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகத் தான் அவரது வெளிப்புற உடலுறுப்புகள் ஆண் உறுப்பினை போலவே காணப்படுகின்றன என்றும், இந்த நிலைமையை சரிசெய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கடுப்பான கணவர்
இந்த விஷயம் அறிந்ததும் அந்த நபர் தனது மனைவியை அவரது பெற்றோரிடம் திருப்பி அனுப்பி, தான் “ஏமாற்றப்பட்டதாகவும்” கூறியுள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே சண்டை மூண்ட நிலையில் பெண் வீட்டார் அந்த கணவன் மீது FIR பதிவுசெய்துள்ளனர். பெண்வீட்டாரின் செயலால் இன்னும் கோபமடைந்த அந்த நபர் IPC பிரிவு 420ன் கீழ் பெண் வீட்டார் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார். பெண்ணின் உடல்நிலை குறித்து தனக்கு தெரிவிக்க தவறியதன் மூலம் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மோசடி செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் திருமணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த பெண்ணுக்கு இந்த பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவரது உடல்நிலையை சரிசெய்ய ஹார்மோன் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த கணவர் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, நீதிமன்ற கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்பட மறுத்த பெண்ணுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அந்த பெண் வீட்டார் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.
இறுதியில் நடந்தது என்ன?
பெண் வீட்டார் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை நாட, அந்த கணவர் இப்பொது உச்ச நீதிமன்றத்தில் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இறுதியாக இப்பொது அந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் இந்த வழக்கை ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. இந்த விசித்திரமான வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்பதை ஏப்ரல் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.