TamilSaaga

பவர்பேங்க் வெடிக்குது! சிங்கப்பூர் SCDF தரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

சிங்கப்பூரில் கடந்த ஆறு ஆண்டுகளில் கையடக்க மின்தேக்கிகளால் (பவர்பேங்க்) 58 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 13 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது, மின்தேக்கிகளின் பாதுகாப்பின்மை குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டில் 13 தீ விபத்துகளும், 2022 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தலா 11 தீ விபத்துகளும், 2020ஆம் ஆண்டில் 6 விபத்துகளும், 2019ஆம் ஆண்டில் 7 விபத்துகளும் பதிவாகியுள்ளன. இந்தத் தொடர்ச்சியான தீ விபத்துகள், மின்தேக்கிகளைப் பயன்படுத்தும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ரயிலில் பயணித்த பெண் ஒருவர் வைத்திருந்த மின்தேக்கியில் திடீரென தீப்பிடித்தது. இதனால், ரயிலில் பயணம் செய்த 650 பயணிகள் ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்தில் அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இந்தச் சம்பவம், மின்தேக்கிகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், தென் கொரியாவில் ஏர் பூஷன் விமானத்தில் மின்தேக்கி தீப்பிடித்ததால் விமானம் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பல விமான நிறுவனங்கள் பயணத்தின்போது மின்தேக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 1 முதல் விமானத்திற்குள் மின்தேக்கி மூலம் பிற சாதனங்களுக்கு மின்னூட்டத் தடை விதித்துள்ளன. மேலும், விமானத்திற்குள் உள்ள யுஎஸ்பி போர்ட் மூலம் மின்தேக்கிக்கு மின்னூட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்ச்சியான தீ விபத்துகள் மற்றும் விமான நிறுவனங்களின் தடை காரணமாக, சிங்கப்பூரில் மின்தேக்கிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தரமான மின்தேக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

விமானப் பயணிகள் கவனத்திற்கு! சிங்கப்பூர் விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!

Related posts