சிங்கப்பூரில் நேற்று சுமார் 10 மாத இடைவெளிக்கு பிறகு உள்ளூர் தொற்று எண்ணிக்கை 50ஐ கடந்தது. அதிலும் குறிப்பாக KTV குழுமம் தொடர்பான தொற்று எண்ணிக்கை தான் அதிக அளவில் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மூன்று கேடிவி ஆபரேட்டர்கள் தடையை மீறி தங்கள் வளாகத்திற்குள் “ஹோஸ்டிங் சேவைகளை” வழங்கியதாகக் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆபரேட்டர்களின் அந்த செயல் சிங்கப்பூரின் தற்காலிக கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகள் 2020ன் கீழ் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறுவதாகும். மேலும் பாதுகாப்பு காரணங்கள் கருதி அந்த மூன்று கேடிவி நிறுவனங்கள் குறித்த தகவல்களை காவல்துறை ஊடக வெளியீட்டில் குறிப்பிடவில்லை.
மேலும் இந்த விசாரணையின்போது மூன்று கேடிவி லவுஞ்சிற்குள் உபசரிப்பு சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 20 முதல் 34 வயதுக்குட்பட்ட 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களாக கருதப்படும் அந்த பெண்கள், குடிவரவு சட்டம் மற்றும் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.