TamilSaaga
singapore court

வெளிநாட்டில் பத்து வருட பணி, விதியால் முடிந்த சோகம்:  இந்தியருக்கு மரண தண்டனை!

குவைத் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கபட்வஞ் நகரைச் சேர்ந்த 38 வயதான முஸ்தாகிம் பத்தியரா என்பவர் தனது முதலாளியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்திற்காக குவைத்தில் தூக்கிலிடப்பட்டார்.

கடந்த பத்து வருடங்களாக வளைகுடா நாடுகளில் சமையல்காரராகப் பணியாற்றி வந்தவர் முஸ்தாகிம். ஆரம்பத்தில் துபாயில் தனது பணியைத் தொடங்கிய அவர், பின்னர் பஹ்ரைனுக்கு குடிபெயர்ந்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக குவைத்தில் ரேகானா கான் – முஸ்தஃபா கான் என்பவரது வீட்டில் தங்கி சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

அங்கு தங்கியிருந்த சமயத்தில், முஸ்தாகிமுக்கும் அவரது முதலாளியான ரேகானா கானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கருத்து வேறுபாடுகள் நாளடைவில் முற்றிய நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தீவிரமடைந்தபோது, ஆத்திரமடைந்த முஸ்தாகிம், ரேகானா கானை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உடனடியாக கைது செய்யப்பட்ட முஸ்தாகிம் மீது குவைத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2021 ஆம் ஆண்டு முஸ்தாகிமுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி குவைத் நாட்டில் முஸ்தாகிமுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இந்த துயரமான தகவலை முஸ்தாகிமின் குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, முஸ்தாகிமின் உடல் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 30) அவரது சொந்த ஊரான கபட்வஞ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் வானிலை அறிக்கை: மே முதல் இரண்டு வாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மத்தியில் இந்த நிகழ்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் வறுமை நிலையை போக்க வெளிநாடு சென்ற முஸ்தாகிம், எதிர்பாராத விதமாக குற்றவாளியாகி தூக்கிலிடப்பட்டது அவரது குடும்பத்தினருக்கும் ஊர் மக்களுக்கும் பெரும் துயரத்தை அளித்துள்ளது. இந்த சம்பவம் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

Related posts