TamilSaaga

“காஞ்சனா 3 பட நடிகை அலெக்ஸாண்ட்ரா” : கோவாவில் தூக்கிட்டு தற்கொலை – காதலரை பிரிந்த சோகமா?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஹாரர் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் மக்களின் மத்தியில் மிகவும் பரிட்சயமான ஹாரர் படங்களில் காஞ்சனா திரைப்படமும் அதன் அனைத்து பாகங்களும் அடங்கும். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அவர்களுடைய நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான “காஞ்சனா 3” படத்தில் நடித்த நடிகை அலெக்ஸாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“காஞ்சனா 3” படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் லாரன்ஸின் காதலியாக ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அலெக்சாண்ட்ரா என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நடிகையும் மாடல் அழகியுமான அலெக்ஸாண்ட்ரா தனது காதலருடன் இந்தியாவில் உள்ள கோவாவில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார்.

இந்நிலையில் 24 வயது நிரம்பிய அலெக்ஸாண்ட்ரா கடந்த வியாழக்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலனை பிரிந்த அலெக்ஸாண்ட்ரா மிகுந்த மன வேதனைக்கு உள்ளானார் என்றும். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அலெக்ஸாண்ட்ராவின் இந்த மர்மமான மரணம் குறித்து கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அலெக்ஸாண்ட்ரா சென்னை போலீசில் புகார் அளித்ததும், அப்போது அந்த நபர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related posts