சிங்கப்பூர் Boon Lay Drive-ல் மோசமான தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 20 மற்றும் 21 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல் படை (SPF) வியாழன் மாலை (ஏப்ரல் 7) தெரிவித்துள்ளது.
Boon Lay Drive பகுதியில் இரண்டு நபர்கள் சேர்ந்து வேறொரு இரண்டு நபர்களை ஆயுதங்களுடன் தாக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் கையில் கூர்மையான ஆயுதங்கள் இருந்தன.
கேமராக்கள் மற்றும் சிசிடிவி வீடியோக்கள் உதவியுடன், ஜூரோங் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் தாக்குதல் நடத்திய இருவரின் அடையாளங்களை கண்டறிந்து, சிங்கப்பூர் நேரப்படி 4.05 மணியளவில் உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 12 இல் வைத்து அவர்களை கைது செய்ததாக SPF கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், 22 மற்றும் 23 வயதுடையவர்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டு சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து வீடியோ ஒன்று சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், ஒரு பெண் குரல் கேட்கிறது, அவர் போலீசை அழைத்ததாக கத்துகிறார், ஆண்கள் முன்னும் பின்னுமாக நடக்கிறார்கள். அப்போது அந்த நபர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு அந்த இடத்தை விட்டு ஓடுவதைக் காண முடிகிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் முகத்தில் இரத்தம் ஓடுவது போன்ற தோற்றத்துடன் தெரிய, மற்றொரு நபர் அவருக்கு சிகிச்சை அளிப்பதும் தெரிகிறது.
“காவல்துறையினர் இதுபோன்ற வன்முறைச் செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், மேலும் குற்றவாளிகளை சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
“கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் அபராதம் அல்லது சவுக்கடிக்கு ஆளாக நேரிடும்” என்பது குறிப்பிடத்தக்கது.