TamilSaaga

மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு : புதிய உயரத்தை எட்டிய சிங்கப்பூர் – பாராட்டிய பிரதமர்

சிங்கப்பூரில் தெங்கே நீர்த்தேக்கத்தில் அதிகபட்சமாக 60 மெகாவாட் திறன்கொண்ட மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு இன்று (ஜூலை 14) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. பிரதமர் லீ ஹ்சியன் லூங் இந்த திட்டத்தை “சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு சிங்கப்பூரின் முதல் படி” என்று கூறி பாராட்டினார்.

சிங்கப்பூரில் 45 ஹெக்டேர் பரப்பளவில் – சுமார் 45 கால்பந்து மைதானங்களுக்கு சமமான – செம்ப்கார்ப் தெங்கே மிதக்கும் சூரிய பண்ணையில் 122,000 சோலார் பேனல்கள் உள்ளன. அவை 25 ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்கு திறன்கொண்டவை.

மேலும் இது உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புகளில் ஒன்றாகும் என்று தேசிய நீர் நிறுவனமான PUB மற்றும் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன.

இந்த மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சிங்கப்பூரில் உள்ள ஐந்து உள்ளூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்க போதுமானதாக இருக்கும். மேலும் இது PUBயின் ஓர் ஆண்டு எரிசக்தி தேவைகளில் சுமார் 7 சதவீதத்தை ஈடுசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts