‘சீக்கா’ என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கும் இடையேயான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு குறித்தும், வெளிநாட்டினர் வேலைவாய்ப்புக் கொள்கை குறித்தும் விவாதிப்பதற்கான சவாலை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) ஏற்பதாக தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவாதத்திற்கு தயாராகும் வகையில் இந்த நிகழ்வு தொடர்பான கூடுதலான தகவல்களை ஜூலை மாதத்தில் நாடாளுமன்றம் கூடும்நேரத்தில் அரசிடம் இருந்து எதிர்க்கட்சி பெற்றுக்கொள்ளும் என்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பகுதியில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து பொருத்தமான தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்வது குறித்து பிஎஸ்பி முடிவு செய்யும் என்றும் அதற்கு பிறகு விவாதத்திற்கான தேதியை முடிவு செய்ய வேண்டியது மன்றத்தின் நாயகரின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
மேலும் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி 2020ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள ‘எம்ப்ளாய்மெண்ட் பாஸ்’, ‘எஸ் பாஸ்’, வேலை அனுமதி அட்டை போன்றவற்றின் எண்ணிக்கை குறித்த கேள்விகளைத் தங்களுடைய கட்சி கேள்விகளை எழுப்பும் என்றார் லியோங் மன் வாய்.
முன்னதாக திரு. லியோங்கை நோக்கி, அமைச்சர் சண்முகம் “சீக்கா குறித்து விவாதிப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்குமாறு உங்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்.” “சீக்கா பற்றி வெளியான கருத்துகளில் பெரும்பாலான விஷயங்கள் பொய் என்பது உங்களுக்கும் தெரியும்,” என்றும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.