TamilSaaga

சென்னையில் பங்களா வாங்கிய அறந்தாங்கி நிஷா.. 7 வருட உழைப்புக்கும், அவமானத்துக்கும் கிடைத்த பரிசு – இஷ்டத்துக்கு அடித்து விட்ட யூடியூப் சேனல்கள்!

அறந்தாங்கி நிஷா… 2015ல் நடந்த ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்து, இன்று யாருமே எதிர்பார்க்காத ஒரு இடத்தை எட்டிப்பிடித்த பெண்… அல்லது குடும்பத் தலைவி… அல்லது ஏளன பேச்சுக்கும், அவமானத்துக்கும் ஆளான பெண் என்று கூறலாம்.

தொடர்ந்து விஜய் டிவியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் Performer-ஆகவும், Contestant-ஆகவும், தொகுப்பாளராகவும் கூட தனது முன்னேற்றத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

இடையிடையே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பட்டிமன்ற பேச்சாளராகவும் அவதாரம் எடுத்த நிஷா, மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தால், கூட்டத்தில் ஓய்வின்றி சிரிப்பு சத்தம் வெடித்துக் கொண்டே இருக்கும். அவ்வப்போது, சில படங்களிலும் நடித்து வந்தார். ஆனால், இதுவரை வெயிட்டான கேரக்டர் எதுவும் அவருக்கு அமையவில்லை. இந்த சூழலில் தான் அவருக்கு மிகப்பெரும் வாய்ப்பாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல போட்டியாளர்கள் அதில் கலந்து கொண்ட நிலையில், நிஷா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ‘அன்பு கேங்’ எனும் கூட்டத்தில் சிக்கி காணாமல் போனார். அவரது அக்மார்க் சிரிப்பு பட்டாசு ஒன்றைக் கூட அவர் பிக்பாஸில் வெளிப்படுத்தவில்லை. அர்ச்சனாவுடன் பின்னால் ஒளிந்து கொண்டதால் அவரது திறமை ஒன்றுமே வெளிப்படாமல் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணடித்தார்.

எனினும், அதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட நிஷா, இப்போது கலக்கப்போவது யாரும் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ராமருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் ட்ரீட் வைத்து வருகிறார். அந்த ஷோவுக்கு அர்ச்சனா நடுவர்களில் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் படிக்க – பணியிடத்தில் பேருந்துக்கும், தூணுக்கும் இடையில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் பலி – உதவி செய்ததற்கு கிடைத்த தண்டனை!

சரி விஷயத்துக்கு வருவோம்… டிவி ஷோஸ், பட்டிமன்றம், சினிமா என்று தினமும் பிஸியாக இருக்கும் நிஷா, சென்னையில் மிகப்பெரும் வீடு ஒன்று வாங்கியதாக பல யூடியூப் சேனல்களில் வீடியோ வெளியிடப்பட்டது. சில மீடியாக்கள் இந்த செய்தியாகவும் பதிவிட்டிருந்தன. பார்ப்பதற்கு பங்களா போல் இருக்கும் அந்த வீடு நிஷா வாங்கியதாக செய்தி பரவியதையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ஆனால், உண்மையில் அந்த வீட்டை நிஷா வாங்கவில்லை. இதனை அவரே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர், ‘அது எப்படிப்பா, எனக்கே தெரியாமல் நான் பங்களா கட்டுவேன்? பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தச் சொல்லுங்கப்பா. இத பார்த்துட்டு நிறைய பேர் எனக்கு வாழ்த்து சொன்னீங்க.. நிறைய பேர் என்னை கிண்டல் பண்ணீங்க. இது வதந்தி தான். ஆனா, முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்லை. சீக்கிரம் இப்படி ஒரு பங்களா கட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

நிஷா சொல்வது உண்மை தான். இந்த செய்தி வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், இப்படியொரு பங்களாவை நான் நிச்சயம் கட்டுவேன் என்று அவர் சொன்ன அந்த உத்வேகம் நிச்சயம் நம் அனைவருக்கும் இருக்க வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts